குறுகிய நேரத்தில், குறைந்த செலவில் கொரோனா தொற்றைக் கண்டறியும் காகிதத்தின் அடிப்படையிலான (Paper-Strip Test)புதிய தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் சிலர் உருவாக்கியுள்ளனர்.
"பெலுடா" (Feluda) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பரிசோதனை முறைமை "கிறிஸ்பர்" என்ற மரபணு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
பெலுடா என்ற இந்த உபகரணத் தொகுப்பு ஒரு மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவை தெரிவித்துவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதன் விலை சுமார் 500 என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் பெரிய நிறுவனமான டாட்டா நிறுவனம் இந்த உபகரணத் தொகுப்பைத் தயாரிக்கிறது. காகிதத்தை அடிப்படையாகக் கொண்டு கோவிட்-19 நோய் பாதிப்பைக் கண்டறியும் முதலாவது தொழில்நுட்பமாக இது இருக்கும்.
``இது எளியது, துல்லியமானது, நம்பகமானது, அதிக அளவில் செய்யக் கூடியது, சிக்கனமானது'' என்று இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே. விஜய்ராகவன் பி.பி.சி. செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைப்பு உயிரியலுக்கான சி.எஸ்.ஐ.ஆர். கல்வி நிலையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இதை உருவாக்கியுள்ளனர்.
இந்த உபகரணம் தனியார் ஆய்வகங்களிலும் பரிசோதிக்கப்பட்டது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் உள்பட சுமார் 2,000 நோயாளிகளிடம் இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் 96 சதவீதம் அளவுக்கு சரியான முடிவு கிடைத்தது. மிகச் சரியாகக் கூறினால் 98 சதவீதம் துல்லியத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. நுண் உணர்வின் அடிப்படையில் வேறுபாட்டைக் கண்டறியும் இந்த நுட்பத்தின் மூலம், நோய் பாதித்த அனைவரும் அடையாளம் காணப்படுவார்கள். தனித்துக் காட்டும் திறன் 98 சதவீதம் இருப்பதால், நோய் பாதிப்பு இல்லாத அனைவருமே பிரித்து காட்டப்படுவார்கள்.
முதலாவது அம்சத்தின்படி தவறான பரிசோதனை முடிவு அதிக அளவில் வராது; இரண்டாவதாக தவறான நேர்மறை எண்ணிக்கை அதிகமாக இருக்காது. வணிக ரீதியில் இந்தப் பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது.
``பி.சி.ஆர். பரிசோதனை மீது உள்ள நம்பகத்தன்மை இந்தப் புதிய பரிசோதனை முறையின் மீதும் உள்ளது. இது வேகமாக முடிவைத் தெரிவிக்கும், நவீன கருவிகள் இல்லாத சிறிய ஆய்வகங்களிலும் கூட இந்த பரிசோதனையைச் செய்ய முடியும்'' என்று அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் பணிப்பாளர் டாக்டர் அனுராக் அகர்வால் கூறியுள்ளார்.
பி.சி.ஆர். பரிசோதனைக்கு எடுப்பதைப் போலவே பெலுடா பரிசோதனைக்கும் மாதிரி எடுக்கும் முறை இருக்கும். மூக்கின் பின்பகுதியில் சுவாசப் பாதையில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, மூக்கில் சில அங்குலம் உள்ளே இருந்து மாதிரிகள் எடுக்கப்படும்.
வழக்கமான பி.சி.ஆர். பரிசோதனையில், நோயாளியிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள், அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. அங்கு பல ``சுற்றுகள்'' பரிசோதனைக்குப் பிறகு முடிவு கண்டுபிடிக்கப் படுகிறது.
புதிய பெலுடா பரிசோதனையில் கிறிஸ்பர் என்ற மரபணு தொழில்நுட்பத்தின் மூலம் வைரஸ் தொற்று விரைவாகக் கண்டறியப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.